
உதகை: சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பிரமிடு வடிவில் சிறப்பு மலர் அலங்காரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது. அப்போது கண்காட்சிகள், சிறப்பு மலர் அலங்காரங்கள் இடம்பெறுவது வழக்கம். இதனால் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு அதிக அளவில் வருகின்றனர்.
இவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள். அங்கு பழமையான மரங்கள், கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, இலை பூங்கா, பெரிய புல்வெளி மைதானம், மலர் மாடம், அலங்கார வேலிகள் போன்ற இடங்களில் பல வண்ண மலர்களை கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்வார்கள்.
இந்நிலையில், கோடை சீசனை முன்னிட்டு பராமரிப்புப் பணிகளுக்காக பெரிய புல்வெளி மைதானம் மூடப்பட்டுள்ளது. மேலும், மலர் அலங்காரங்கள் இல்லாததால் தற்போது வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. எனவே, சென்னை மலர் கண்காட்சிக்காக தயாரிக்கப்பட்டு, மீதமிந்த மலர்த் தொட்டிகளை வைத்து தாவரவியல் பூங்காவில் பிரமிடு உட்பட சிறப்பு அலங்காரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறும் போது, “பூங்காவில் இரண்டு இடத்தில் 900 தொட்டிகளில் பிரமிடு செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. மேலும், மலர் மாடத்தில் பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு பூக்கள் பூத்துள்ளன. அவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்” என்றனர்.