
Last Updated:
ADMK Jayakumar | திமுக அரசின் செயல்பாடுகளை வெகுவாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழ்நாட்டுக்கு விரைவில் கருணாநிதி நாடு என பெயர் மாற்றி விடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் தெரியும். அந்த அளவுக்கு இந்தியா முழுவதும் பிரசித்திபெற்ற சாலை. அந்த சாலையின் பெயர் மாற்றப்படுவதை பொதுமக்களை விரும்ப மாட்டார்கள். விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகத்தை அதிகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகிறது. அதிமுக எனக்கு என்ன பண்ணி கொடுத்தாலும் நான் சிறப்பாக செய்வேன். அதிமுகவில் கட்சிக் கொடி கட்டுபவன் கூட முதல்வராக முடியும். ஆனால் திமுகவில் நேரு, பொன்முடி போன்றவர் ஸ்டாலினுக்கு அடுத்து வர முடியுமா ? திமுகவில் அது போன்ற நிலைமை இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
திமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் உதயநிதி ஸ்டாலின் முன் நிறுத்தப்படுகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, முதல்வர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்தான் நிழல் உலக முதல்வராக செயல்பட்டு வருகிறார்கள் என்றும் கனிமொழிக்கு எந்த வேலையும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மகுடத்தை உதயநிதி ஸ்டாலினுக்கு சூட்ட வேண்டுமென முதல்வர் நினைக்கிறார். திமுகவில் பாட்டன், அப்பா, மகன் என வாரிசு அரசியல் மட்டுமே நடப்பதாகவும் தெரிவித்தார்.
திமுக அமைச்சர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மரியாதை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஜமீன்தார்களாக இருக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் விலைவாசி மற்றும் பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். திமுக ஆட்சிக்காலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதியதை யாராலும் மறக்க முடியாது.
அதே போன்று தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவியர் மோதிக் கொள்வது வேதனை அளிக்கிறது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் அமைச்சர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதனால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகள் வருகிறது என்றார்.
மேலும், சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில் அதிமுக எம்.எல்.ஏ.,வுக்கு தொடர்பு இருப்பதாக பரப்பி வருகின்றனர். எங்களுக்கு மடியில் கனம் இல்லை; அதனால் பயம் இல்லை எனவும் தெரிவித்தார்.
May 02, 2022 12:55 PM IST