
இன்றைய சட்டப்பேரவையில், தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘எதிர்க் கட்சி தலைவரின் கேள்விகளுக்கு நாளை பதிலுரையில் விரிவாக பதிலளிப்பதாகவும், இன்று மயிலாப்பூரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். அதற்கு மட்டும் விரிவாக விளக்கத்தை சொல்ல விரும்புகிறேன்.
சென்னை மயிலாப்பூரில் குடியிருந்த அமெரிக்காவிலிருந்து திரும்பிய தமிழ்நாட்டு தம்பதியினர் ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா காணாமல் போனது குறித்து சம்பவம் நடைபெற்ற அன்று மதியம் ஒரு மணி அளவில் புகார் பெறப்பட்டது.
புகார் பெறப்பட்டு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சென்னை மாநகர காவல்துறையின் சார்பில் விரைவான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அதில் தொழில்நுட்ப உதவியோடு ஸ்ரீகாந்துக்கு சொந்தமான இன்னோவா காரோடு அவரது ஓட்டுனர் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் பயணித்துக் கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக எந்தவித தாமதமின்றி ஆந்திரப்பிரதேச காவல் துறையோடு தொடர்புகொண்டு அவர்களின் ஒத்துழைப்போடு பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் இன்னோவா கார் சென்றது கண்டறியப்பட்டது.
அதனையடுத்து ஸ்ரீகாந்த்தின் ஓட்டுநரும் அவர்களுடைய கூட்டாளிகளும் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் திருடு போன சொத்துக்களான தங்க நகைகள், 50 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இறந்தவர்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடல்கள் மீட்கப்பட்டன. இது முழுக்க முழுக்க ஆதாயக் கொலை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது என்றாலும் முழு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். விரைந்து பணியாற்றி 6 மணி நேரத்திற்குள் அண்டை மாநிலத்திற்கு தப்பிச் சென்றார் கொலையாளிகளை கண்டுபிடித்த சென்னை மாநகர காவல்துறைக்கும், தனிப்படை போலீசாருக்கும் இதில் ஈடுபட்டு பணியாற்றிய அனைத்து காவலர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதையும் அலட்சியப்படுத்தாமல், உடனுக்குடன் உடனடியாக உரிய வகையில் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்க கூடிய துறையாகத் தான் இந்த ஆட்சியில் இருக்கக்கூடிய காவல்துறை உள்ளது என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு நினைவூட்டுகிறேன்” என்றார்.