
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025 – 2026ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று (14ஆம் தேதி) தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 13 ஆயிரத்து 807 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை, மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதனிடையே, இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உரிய தகுதிகள் இருந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் மேல்முறையீடு செய்ய வேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கம் அரசு சார்பில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்படும். அந்த காரணங்கள் தவறாக இருந்தால் உரிய ஆவணங்களை சமர்பித்து மேல்முறையீடு செய்து இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியும்.
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மொபைல் எண், வங்கி பாஸ்புக் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். வங்கி பாஸ்புக்கில் இருக்கும் மொபைல் எண்ணையே இந்த திட்டத்துக்கும் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணாக கொடுக்க வேண்டும். உங்கள் விண்ணப்பம் சரியாக இருந்தால் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?
1. மகளிர் உரிமைத்தொகை பெற ஆதார் எண், பயோமெட்ரிக் அல்லது ஒரு முறை கடவுச்சொல் (OTP) தரவை ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்புக்காக வழங்க வேண்டும்.
2. விண்ணப்பதாரரின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
3. விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்களாக மற்றும் வருமான வரி செலுத்துபவர்களாக இருக்கக் கூடாது. அதேபோல் ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோராக இருக்க கூடாது.
4. விண்ணப்பதாரரின் குடும்பத்தில் மாநில, மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருக்க கூடாது.
5. விண்ணப்பதாரரின் குடும்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி வார்டு உறுப்பினர்களைத் தவிர) இருக்க கூடாது.
6. விண்ணப்பதாரரின் குடும்பத்தில் யாரும் சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்க கூடாது.
7. விண்ணப்பதாரரின் குடும்பத்தில் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து (Annual turnover) சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் யாரும் இருக்க கூடாது.
8. விண்ணப்பதாரரின் குடும்பத்தில் முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இருக்க கூடாது.
9. விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களுக்குக் கூட்டாக 5 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் இருக்க கூடாது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 14, 2025 10:30 PM IST