
Last Updated:
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட மற்றொரு துயர சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். 13.07.2025 அதிகாலையில், ஏழு மீனவர்கள், அவர்களின் இயந்திர மீன்பிடிப் படகுடன் கைது செய்யப்பட்டனர்.
அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், மற்றொரு இயந்திரப் படகு இலங்கைக் கடற்படைக் கப்பலால் மோதப்பட்டதாகவும், இந்தப் படகின் பின்புறம் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிய வருகிறது.
மீண்டும் மீண்டும் நிகழும் இந்த சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன. அவை நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பங்களை நீண்டகால பொருளாதார நெருக்கடி மற்றும் தொடர்ச்சியான துயரங்களுக்கும் உள்ளாக்குகின்றன.
இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும் வகையில், 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மீனவர்களில் பலர் இன்னும் இலங்கைக் காவலில் உள்ளனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். தற்போது, 232 தமிழக மீன்பிடிப் படகுகளும் 50 மீனவர்களும் இன்னும் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் @DrSJaishankar அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம்… pic.twitter.com/4MmZFvNK4Y
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 13, 2025
இந்த தொடர்ச்சியான அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கிடைக்கக்கூடிய அனைத்துத் தூதரக வழிகளையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
July 13, 2025 8:10 PM IST