
ஊட்டி ரோஜாப் பூங்காவில் நேற்று தொடங்கிய ரோஜா கண்காட்சியில், கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி 2 லட்சம் ரோஜாக்களைக் கொண்டு பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி ரோஜாப் பூங்காவில் கண்காட்சியும் நடைபெறும். அதன்படி, தோட்டக்கலைத் துறை சார்பில் 20-வது ரோஜா கண்காட்சி ஊட்டி ரோஜாப் பூங்காவில் நேற்று தொடங்கியது. அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கண்காட்சியைத் தொடங்கிவைத்தனர்.
இதில், 2 லட்சம் பல்வேறு வண்ண ரோஜா மலர்களைக் கொண்டு, டால்பின், பென்குயின், முத்துச்சிற்பி, கடல் குதிரை, நீலத் திமிங்கலம், நத்தை, கடல் கன்னி, நட்சத்திர மீன், அழிந்து வரும் கடல் உயிரினமான கடல் பசு மற்றும் ‘சேவ் அக்குவாடிக் வேர்ல்டு’ போன்ற வடிவங்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத் துறையினரால் பல வண்ண ரோஜா மலர்களைக் கொண்டு இசைக்கருவி, மீன் போன்ற வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் தோட்டக்கலைத் துறை சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ரோஜா செடி வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கண்காட்சி நிறைவு விழாவில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்தக் கண்காட்டி வரும் 12-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.