
தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மகாவீர் ஜெயந்தி, சனி, ஞாயிறு வார விடுமுறை, தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை என தொடர்ந்து அரசு விடுமுறை தினங்களால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த 4 நாட்களாக அதிகரித்துக் காணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வந்தனர்.
கடந்த சில நாட்களாக கோடை மழை காரணமாக கொடைக்கானலில் ரம்மியமான தட்பவெப்ப நிலை இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மோயர் பாய்ன்ட், குணா குகை, தூண் பாறை, பைன் மரக் காடுகள், பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனர். அதிக வாகனங்களால் கொடைக்கானிலில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் ஒருநாள் சுற்றுலாவா கொடைக்கானல் வந்தவர்கள், அனைத்து சுற்றுலாத் தலங்களையும் முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, “கொடைக்கானலில் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை. சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எனவே, பார்க்கிங் வசதியை மேம்படுத்த வேண்டும்” என்றனர்.
கொடைக்கானலில் நேற்று அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.