
நாகர்கோவில்: குமரி கண்ணாடி இழை பாலத்தை ஒன்றரை மாதத்தில் மூன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு கடல் நடுவே விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையினை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பதோடு, இரு பாறைகளையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை தரைத்தளபாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
மேலும் அய்யன் திருவள்ளுவர் சிலையினை காண வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் அவர்களுக்கு வழிகாட்டிட காவல் துறை, வருவாய்த் துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பாக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள் நாள்தோறும் அதிக அளவில் கண்ணாடி இழை பாலத்தினை வந்து பார்வையிடுகிறார்கள். ஜனவரி மாதத்தில் 2 லட்சத்து 15,000 சுற்றுலா பயணிகளும், பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வரை மட்டும் 1 லட்சத்து 24,000 சுற்றுலா பயணிகள் என மொத்தம் 3.39 சுற்றுலா பயணிகள் இதுவரை பார்வையிட்டுள்ளார்கள். நாளுக்கு நாள் கண்ணாடி இழை பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.