
Last Updated:
நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில், 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கிட்னி திருட்டு விவகாரத்தில் 2 தனியார் மருத்துவமனைகள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தமிழக அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.
விதிமுறைகளை மீறி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடப்பதாக வெளியான செய்திகள் குறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத்தை கடந்த 18 ஆம் தேதி நியமித்ததாக தமிழ்நாடு அரசு விளக்கம் தந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து வினீத் தலைமையிலான அதிகாரிகள் குழு, புகார்கள் எழுந்த பகுதிகளில் விரிவான விசாரணை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.
இவ்விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை அறிக்கையினை வினீத், அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி சிதார் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின்படி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இந்த ஆணையை பிறப்பித்துள்ளதாகவும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
July 23, 2025 9:46 PM IST