
Last Updated:
அன்புமணி நடைபயணத்திற்கு மீண்டும் தடை கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் உள்துறைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளார்.
அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்க கோரி உள்துறைச் செயலாளரிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி, கடந்த 25ஆம் தேதி தனது தந்தையும், பாமக நிறுவனருமான ராமதாஸின் பிறந்தநாள் அன்று, தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை துவங்கினார். முன்னதாக அன்புமணி நடைப்பயணத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் எனவும், அதனால், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் நிறுவனர் சார்பாக புகார் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து அன்புமணி பயணம் துவங்கிய 25ஆம் தேதி அன்றே திடீரென, கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்ய தமிழ்நாடு டிஜிபி அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்ததும், அன்புமணி தனது இல்லத்தில் வழக்கறிஞர் கே. பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன்பிறகு 26ஆம் தேதி பாமக வழக்கறிஞர் கே. பாலு, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கை சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாலு, “இந்த பயணத்திற்கு தடை என்ற தகவல் கிடைக்கப்பெற்றது. இதை அறிந்து பா.ம.க.வினர் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
அதன் பிறகு டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தடை விதிக்கப்பட்டது என செய்தி வெளியானது. அது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள், சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐஜி, தொடர்புடைய காவல் மாவட்ட கண்காணிப்பாளர்களிடம் பேசிய பின், தெளிவுபடுத்தினார்கள்.
இது தடை விதிப்பதற்கான சுற்றறிக்கை அல்ல என தெரிவித்தார்கள். இந்த சுற்றுப்பயணத்திற்கு காவல்துறை தடை என்பது தவறான செய்தி. தொடர்புடைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உரிய உத்தரவை பிறப்பிப்பார்கள் என தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி நடைபயணம் நடைபெறும்” என விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக திட்டமிட்டப்படி அன்புமணியின் நடைபயணம் நடந்துவருகிறது. இந்நிலையில், அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்கக் கோரி உள்துறைச் செயலாளரிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் மீண்டும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
July 28, 2025 9:45 PM IST